Monday, July 9, 2007

விவேகானந்தர் நினைவு தினம் இன்று!




ஜூலை 4-ம் தேதி விவேகானந்தர் நினைவுநாள். விவேகானந்தர் பத்தி ஏதாவது எழுதணும்னு பார்த்தால் என்னிடம் உள்ள புத்தகங்களில் எதுவுமே கிடைக்கவில்லை. கூகிளில் தேட நேரம் இல்லை.

ஒவ்வொரு நாள் பதிவு போடுவதே இப்போதெல்லாம் பெரும்பாடாக இருக்கிறது. அதுக்கு ஏற்றாற்போல் வழக்கமான நண்பர் குழாமும் அவங்க அவங்க வேலையிலே ரொம்ப பிசி!. என் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதறேன்.



முதன்முதல் வெளிநாடு சென்று அங்கே நம் நாட்டுக் கலாசாரத்தைப் பரப்பியவர்களில் ஒருவர் விவேகானந்தர். சிகாகோவில் அவர் ஆற்றிய உரை உள்ள புத்தகம் கூட இந்தியாவிலே விட்டுட்டு வந்திருக்கேன்.(ஏற்கெனவே நான் கொண்டு வந்திருக்கும் புத்தகங்களால் எடை ரொம்ப அதிகம் ஆயிட்டதுன்னு மறுபாதி ஒரே புலம்பல்) "என்னருமை அமெரிக்க நாட்டு சகோதர, சகோதரிகளே!" என அவர் தன் உரையை ஆரம்பித்த கணம் ஏற்பட்ட கைதட்டல் ஒலி வெகு நேரத்துக்குக் கேட்டதாய்ச் சொல்லுவார்கள். எவ்வளவு பரந்த மனம் இருந்தால் அனைவரையும் தன் சகோதர, சகோதரியாக எண்ணி இருப்பார்?

அவரை அமெரிக்க நாட்டிற்குப் போகப் பணம் உதவி செய்து அவரை அனுப்பி வைத்துப் பின் வரவேற்பு செய்தது ஒரு தமிழர்! யார் தெரியுமா? ராமநாதபுரம் ராஜா சேதுபதி அவர்கள் தான். முதலில் ராஜாவே போவதாய்த் தான் இருந்தார். பின்னர் விவேகானந்தர் பத்திக் கேள்விப் பட்டு தன்னை விட அவரே தகுதியான நபர் எனத் தீர்மானித்து அவரை அனுப்பி வைத்தார்.

விவேகானந்தர் வெளிநாட்டில் இருக்கும்போது ஒரு பெண்மணி அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், ஏன் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என விவேகானந்தர் அந்தப் பெண்மணியிடம் கேட்க அந்தப் பெண்மணி விவேகானந்தர் போல் ஒரு மகன் தனக்கு வேண்டும் எனவும் அதற்கு அவரைத் திருமணம் செய்து கொண்டால்தானே முடியும் எனவும் சொன்னாராம்.

அதற்கு விவேகானந்தர் அந்தப் பெண்மணியிடம், "தாயே, இந்த நிமிஷம் முதல் நான் உங்கள் மகன், என்னையே நீங்கள் உங்கள் மகனாக எண்ணிக் கொள்ளலாம்." என்று சொன்னாராம். அந்தப் பெண்ணிற்குப் பேச்சு எழவில்லை. இத்தனை சிறிய வயதில் இவ்வாறு நினைக்க மனம் எவ்வளவு பண்பட்டிருக்க வேண்டும்? இது போல் எத்தனையோ நிகழ்ச்சிகள் சின்னச் சின்னதாய் விவேகானந்தர் வாழ்வில் நடந்தவை இருக்கின்றன. முடிந்தால் எல்லாவற்றையும் தொகுத்துப் போடவும் ஓர் ஆசை இருக்கிறது.

விவேகானந்தர் வெளிநாட்டில் நம் கலாசாரத் தூதுவராய்ச் சென்று திரும்பி வரும்போது அவரை சேதுபதி மகாராஜாவைத் தவிர வேறு யாரும் வரவேற்கவில்லை. ஆஸ்தீக இந்துக்கள் அவர் கடல் கடந்து சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். 1905-ம் ஆண்டு பாரதியார் "காசி காங்கிரஸ்" மகாநாடு சென்று திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை ஆன சகோதரி நிவேதிதா தேவியைச் சந்தித்துத் தன் ஆன்மீக குருவாக ஏற்றார்.

ஆன்மீகத் தேடலில் தன்னிறைவு பெற்ற விவேகானந்தரின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும். விவேகானந்தர் இந்து மதத்தைக் காப்பாற்றியதாக சக்கரவர்த்தி ராஜாஜியும், புதிய நவீன இந்தியாவின் ஸ்தாபகர் என்று சுபாஷ் சந்திர போஸாலும், விவேகானந்தரின் நாட்டுப் பற்று மிகுந்த கட்டுரைகளைக் காந்தியும் மேற்கோள் காட்டி இருக்கின்றனர். காந்தி விவேகானந்தரின் எழுத்துக்களுக்கு அறிமுகம் தேவை இல்லை எனவும் கூறி இருக்கிறார்.

விவேகானந்தர் இறந்த பல வருஷங்களுக்குப் பின்னர், ரவீந்திர நாத் தாகூர், "இந்தியாவை அறிய வேண்டுமா? விவேகானந்தரின் எழுத்துக்களைப் படித்தால் அறியலாம். இத்தனை நேர்மறையான சிந்தனைகளுடன் உள்ள இளைஞர் அவரைத் தவிர யாரையும் பார்த்தது இல்லை!" என்று கூறி இருக்கிறார். அவருடைய பிறந்த தினம் ஆன ஜனவரி 12-ம் தேதி இந்தியாவில் இளைஞர்கள் தினமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

பூபேந்திர தத்தா என்ற சுதந்திரப் போராட்டப் புரட்சி வீரரின் சகோதரர் ஆன விவேகானந்தரைத் தன் குருவாக அரவிந்தரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். விவேகானந்தர் இளைஞர்களுக்குத் தான் அதிகம் எழுதி இருக்கிறார். அன்றைய நாட்களில் இளைய சமுதாயத்தைத் தட்டி எழுப்புவதற்காக அவர் சொன்ன சொல்: விழிமின்! எழுமின்! கேண்மின்! இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தும்.


GEETHA SAMBASIVAM

நன்றி -

http://groups.google.com/group/nambikkai/browse_thread/thread/588bc902012c1e35/fde74686a95080f6

மாற்றார் தோட்டத்து மல்லிகை - சுவாமி விவேகானந்தர்



"மாற்றார் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்றார் அறிஞர் அண்ணா. உண்மையான ஆன்மீகவாதிகள் தன் மதம் தன்னை நெறிப்படுத்துவது போல் பிற மதங்கள் அம்மதத்தவரை நல்வழிப்படுத்தும் என்று நம்பினர்.

ஆன்மீகவாதிகள் தங்கள் மதங்களைப் பற்றிச் சொல்வதில் வியப்பொன்றும் இல்லை. பிற மதங்களைப் பற்றி என்ன கருத்து வைத்திருந்தனர் என்று அலசி மதநல்லினக்கத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்த என்னால் இயன்ற சிறு முயற்சியாக ஒவ்வொரு மதம் பற்றி பிற மதத்தவர் கொண்டிருந்த கருத்துக்களை பகிந்து கொள்ளப் போகிறேன்.

சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். தீவிர இந்துவாக இருந்தபோதிலும் பிற மதங்களை நேசித்தார்.கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் வருட உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார்.

சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் பாஸிஸ இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.

முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.


"The HINDUS may get the credit of arriving at it earlier than other races, yet
practical Advaitism, Which looks upon and behaves to all mankind as one's own
soul was never developed among the Hindus. ' Letters of Swami Vivekananda p 463


''சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்." என்றார் இந்த நல்லிணக்க பிதாமகன். மேலும்


'On the other hand, my experience is that if ever any religion approached to
this equality in an appreciable manner, it is Islam and Islam alone, I am firmly
persuaded, therefore, that without the help of practical Islam, Theories of
Vedantism, however fine and wonderful they may be, are entirely valueless to the
vast mass of mankind.... "Letters of Swami Vivekananda p 463


கிறிஸ்தவர்கள்,முஸ்லிம்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் தலித்துகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம். இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,

''பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்துவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது" என்று கூறினார்.
இந்து மதத்தின் ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.


Swami Vivekananda on the issue (Collected works- Vol. VIII, page 330). Says
Swamiji Why amongst the poor of India so many are Mohhamedans? It is nonsense to say that they were converted by the sword, it was to gain liberty from Jamindars
(Feudal lords) and priests. Islam, contrary to the popular belief came to India
through the Arab traders who used to visit the Malabar coast for trade, and it
were the Hindu Kings who built the initial Mosques to sustain the trade. Also
there are still communities in the coastal areas who practice mixed, Hindu and
Muslim, rituals.

கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,

மலபார் பகுதியில் நடந்தது என்ன? ஏழை, எளிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர்களது வீடுகள் அகதிகள் முகாம்களைப் போல ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் விழுந்தால் கூட நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இவ்வளவுக்கும் காரணம் உங்களது கேடுகெட்ட ஜாதி முறைதான். அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு ஆங்கிலப் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அல்லது இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கிறது. நிலமை இப்படி இருக்கும் போது, நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது உங்கள் மதத்தினுடைய பழமையான பழக்க வழக்கங்களையும், ஜாதி முறையையும் தானே தவிர நிச்சயமாக முஸ்லிம்களை எதிர்த்து அல்ல."

இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! நோயின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர், அவர் மேலும் பேசுகிறார் ..

''இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது. எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களானார்கள்" இன்றுள்ள நிலைகளுக்கு விவேகானந்தர் அன்றைக்கே அளித்துள்ள தெளிவான விடை இது.

இந்துக்கள் புத்தமதத்திற்கு மாறியதற்கும் அடிப்படைக் காரணம் ஜாதிய ஒடுக்குமுறைதான் என்பதையும் விவேகானந்தர் தெளிவாக கூறியுள்ளார். அவர் கேட்கிறார்.

''புத்தப் புரட்சி இல்லாமல் செல்வாக்கு மிகுந்த மேல் ஜாதியினரின் கொடுங்கோன்மையிலிருந்து அவதிக்குள்ளாயிருக்கும் லட்சக் கணக்கான கீழ்ஜாதி மக்களுக்கு வேறு எது விடுதலை அளித்திருக்கும்."

என்று விவேகானந்தர் வினா தொடுத்தார். ஜாதியக் கொடுமையின் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரே பின்னாளில் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்பது மனங் கொள்ளத்தக்கது.

பசுக்கள் புனிதமானது. ஆனால் இஸ்லாமியர்கள் பசு மாமிசத்தைப் புசிக்கிறார்கள். எனவே அவர்கள் நமது எதிரிகள் என்று கூறினர். அரியானா மாநிலத்தில் இறந்து போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துக்கள் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறியுள்ளது. ''இறந்து போன பசுமாடு, உயிருள்ள தலித்துகளை விட புனிதமானது..?" என்று கூறுகிறார் ஒருவர்! ஆனால் விவேகானந்தர் பார்வை வித்தியாசமானது.
ஒருமுறை பசுபாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க வந்தார்கள்.

இந்து மதத்தின் புனித சின்னமான பசுக்களை பாதுகாக்க உங்களால் இயன்ற நன்கொடையைத் தாருங்கள்..! என்று வந்தவர்கள் கேட்டார்கள்.

அப்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் சுருண்டு விடுந்து செத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிஜி வந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். 'பட்டினியால் சாகும் மனிதர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்வீர்களா?

வந்தவர்கள் பதில் சொல்லும் போது ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப்பலன். அவர்களை நாங்கள் காப்பாற்ற முடியாது, பசுக்களைக் காப்பாற்றுவது தான் எங்கள் கடமை"" என்றார்கள்.

வெகுண்டெழுந்த விவேகானந்தர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப் பலன் என்றால், பசுக்கள் சாவதும் அதன் கர்மப்பலனாகத் தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத உங்களுக்கு பசுக்களைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது" என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்.

அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் 'சகோதரர், சகோதரிகளே..!"" என்று அவர் அழைத்தது வெறும் உதட்டு வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை ஆகும்.

இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு அடங்கி நடத்த வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.ஆனால் விவேகானந்தரின் ஆன்ம உள்ளம் கண்ட கனவு வேறு.

''என்னுடைய மனக்கண்ணில் எதிர்காலம் குற்றம் குறையற்ற முழுமையானதாக இருக்கும். கஷ்டங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்து மீண்டு விடும். வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் கொண்ட ஒளிமயமான, யாராலும் அடக்க முடியாத இந்தியாவாகத் திகழும்."

இந்தியா என்ற மதச்சார்பற்ற நாடு அனைத்து மதங்களையும் பண்பாட்டையும், இனங்களையும், மொழிகளையும் கொண்ட பல வண்ண மலர்த்தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனா..!



- மரிய குமாரன்

நன்றி -

http://idiminnal.blogspot.com/2005/12/blog-post.html

சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகபாதை






சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இளைஞர்களை "எழுமின் விழிமின்' என்று வீறு கொண்டு எழுச்சியுற அறை கூவல் விடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.

ஒரு துறவி ஆன்மிகப் பணி மட்டுமின்றி தேச உணர்வையும் மக்களுக்கு ஊட்ட முடியும் என்று தனது வாழ்நாளின் கடைசி மூச்சுவரை இந்திய இளைஞர்களை எழுச்சியுறச் செய்தது அவரது ஒப்பற்ற செயலாகும்.இந்திய நாடு என்றால் ஒரு இருண்ட நாடு, நாகரீகம் அற்ற மனிதர்கள் வாழும் இடம். அவர்களுக்குக் கல்வி அறிவு கிடையாது என்று நினைத்துக் கொண்டு இருந்த ஐரோப்பிய மக்களைத் தனது பேச்சாற்றல் மூலமும், தூய்மையான ஆன்மிக வாழ்க்கை மூலமும் இந்திய நாடு ரிஷிகளும், சித்தர்களும், அவதரித்த புண்ணிய பூமி, அனைத்துக் கலைகளும் தழைத்து ஓங்கி நிற்கும் ஒரு பல்கலைக் கழகம், உலக நாகரீகத்தின் முன்னோடியான நாடு என்று அனைவரையும் அறியச் செய்த பெருமை விவேகானந்தரையே சேரும்.

இந்தியாவை அன்று ஆட்சி புரிந்த ஆங்கிலேயருக்கு இதயப் பகுதியாக விளங்கிய கொல்கத்தாவில் விசுவநாத தத்தர் புவனேஸ்வரி தேவி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். விசுவநாத தத்தர் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற வக்கீல்களில் ஒருவர் ஆவார். இவர்களது குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஆன்மிகத்தையே தங்களது வாழ்க்கையில் முக்கியமான ஒரு அங்கமாக வைத்து வந்தது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தார்கள்.

தனது குடும்பத்துக்கு ஆண் வாரிசு இல்லாமல் சென்று விடுமோ என்று மிகுந்த கவலையுடன் கோவில் கோவிலாகத் தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி வந்தார்கள்.இந்த நிலையில் புவனேசுவரி தேவி கர்ப்பமானார். 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் நாள் இந்துக்கள் மிகப்புனிதமாகக் கொண்டாடும் மகா சங்கராந்தியை (பொங்கல்) நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள்.

அதே வேளையில் புவனேசுவரி தேவியின் மகனாக சுவாமி விவேகானந்தர் பிறந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனக்குச் சிவனின் அருளால் ஆண் குழந்தை பிறந்ததால் பெற்றோர்கள் அந்தக் குழந்தைக்கு ""நரேந்திரன்'' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்குப் பொருத்தமாகக் குழந்தைப் பருவத்தில் நரேந்திரன் துருதுருவென்று மிகவும் துடிப்பாக இருந்தார்.நரேந்திரன் தனது வீட்டில் அக்காள்மாரிடம் செய்யும் சேட்டைகளுக்கும், சுட்டித் தனங்களுக்கும் அளவே கிடையாது. இதனால் வீட்டில் உள்ளவர்களும், அவர்களது வீட்டைச் சுற்றி உள்ளவர்களும் நரேந்திரனைப் "பிலே' என்று செல்லமாக அழைத்தனர்.

"பிலே'வின் சுட்டித்தனத்தைக் கட்டுப்படுத்த நினைத்த அவரது தந்தை விசுவநாத தத்தர் அவரைத் தனியாக கவனிப்பதற்குத் தாதிப் பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தினார். அந்தப் பெண் பிலேயுக்குப் புராணக் கதைகளைக் கூறினாள். மேலும் தனது அம்மா பூஜைகள், பஜனைகள் செய்யும் போது பிலேவும் அதில் ஈடுபடத் தொடங்கினான். இவ்வாறு அவனை அறியாது ஆன்மிகத்தில் இறங்க ஆரம்பித்தான்.நரேந்திரனுக்கு முதலில் வீட்டில் வந்து ஒரு ஆசிரியர் பாடம் கற்பித்தார். இதன் பின்னர் வித்யாசாகரின் மெட்ரோ பாலிடன் பள்ளியில் படித்தான். நரேந்திரன் பள்ளியில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை ஒரு முறை கவனித்தால் அதை அப்படியே நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்று இருந்தான்.நரேந்திரன் பள்ளிப் படிப்போடு குஸ்தி. உடற்பயிற்சி, விளையாட்டுக்கள், சிலம்பம் ஆகியவற்றையும் சேர்த்துப் படித்தான்.

நரேந்திரன் 1880ம் ஆண்டு தனது 17ம் வயதில் பி.ஏ. படிப்பை பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். இங்கு படிக்கும்போது தான் அவர் பிரம்ம சமாஜ அங்கத்தினராகச் சேர்ந்தார். அந்தச் சமயம் பிரம்ம சமாஜத்தின் தலைவராக ஸ்ரீகேசவசந்திர சேனர் இருந்தார். அவர் தமது பத்திரிகையின் மூலம் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சரின் புகழைப் பரப்பி வந்தார்.அதே நேரத்தில் நரேந்திரன் கிரேக்க, ஜெர்மனிய, ஆங்கில, அறிஞர்களின் பல புத்தகங்களைக் கற்றார். இதன் விளைவாகக் கடவுளை நேரில் காண முடியுமா? என்ற சந்தேகம் மனதில் ஏற்படத் தொடங்கியது.இது நாட்கள் செல்ல செல்ல அவருக்கு மிகுந்த மனக்குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் கொல் கத்தாவில் உள்ள எல்லா மதப் பெரியவர்களிடமும் சென்று விளக்கம் கேட்டார். ஆனால் அவரின் கேள்விக்குச் சரியான பதிலைக் கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் அவர் ஆழ்ந்த தியானங்களில் ஈடுபடத் தொடங்கினார். பிரம்ம சமாஜத்தின் ஒரு தலைவரான தேவேந்திரநாத் தாகூரை அணுகியும் அதேகேள்வியைக் கேட்டார். அவர் அதற்கு நரேந்திரனைக் கூர்ந்து நோக்கி ""உனக்கு யோகியின் கண்கள் இருக்கின்றன. நீ ஆழ்ந்து தியானம் செய்தால் அதனுடைய பலனை விரைவில் அனுபவிப்பாய்'' என்று கூறினார். ஆனால் இந்த பதிலால் அவர் சமாதானம் அடையவில்லை.ஒரு நாள் நரேந்திரன் கல்லூரியில் ஆங்கிலப் பாட வகுப்பில் இருந்து கொண்டு இருந்தார். அவருக்குக் கல்லூரி முதல்வர் வில்லியம் வேட்ஸ் வொர்த்தின் கவிதையிலுள்ள "பரவச நிலை' என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுக்கும் போது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைக் கண்டால் பரவசநிலை என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ளலாம் என்று விளக்கம் கொடுத்தார்.

இதைக் கேட்ட நரேந்திரனுக்கு ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக ஏற்பட்டது.இந்த நிலையில் நரேந்திரன் வீட்டு அருகே உள்ள சுரேந்திர பாபுவின் வீட்டுக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக வந்தார். அங்கு நரேந்திரனைப் பாடுமாறு அந்த வீட்டுக்காரர் அழைத்தார். அவரும் சென்று ""ஓ மனமே உனது சொந்த இடத்தை அடைவாயாக'' என்ற கருத்து அடங்கிய பாடலைத் தனது தேனிலும் இனிய குரலில் பாடினார். இதைக் கேட்ட ராமகிருஷ்ணர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்.இதன் பின்னர் ராமகிருஷ்ணர் நரேந்திரனிடம் ""ஒரு முறை தட்சிணேசுவரம் வா'' என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்டு 1881&ம் ஆண்டு நரேந்திரனும் அங்கு சென்றார். அங்கு அவரை பக்திப் பாடல்களைப் பாடும்படி ராமகிருஷ்ணர் கூறினார். அதனை ஏற்று அவரும் பாடினார்.

இதனைத் தொடர்ந்து ராமகிருஷ்ணர் நரேந்திரனைத் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் இவ்வளவு காலம் கழித்து வந்து இருக்கிறாயே இது நியாயமா? நான் உனக்காகத்தானே காத்து இருக்கிறேன் என்பதை ஒரு முறையாவது நினைத்துப் பார்த்தாயா? என்றும் உலக ஆசை பிடித்த மக்களின் பேச்சைக் கேட்டுக் கேட்டு என் காதுகள் எரிந்து போய் விட்டன என்றும் தேம்பித் தேம்பி அழுதபடி ராமகிருஷ்ணர் பேசி னார்.இதைக் கேட்ட நரேந்திரன் அவருக்குப் பைத்தியம் எதுவும் பிடித்து விட்டதோ என்று நினைத்தார்.

ஆனால் அந்த அறையை விட்டு வெளியே வந்த பின்னர் ராமகிருஷ்ணரின் ஆன்மிகப் பேச்சினையும், ஆனந்தப் பரவச நிலையையும் பார்த்து அவர் உண்மையான துறவி என்பதை உணர்ந்தார்.அடுத்த 4 ஆண்டுகளில் ஸ்ரீராமகிருஷ்ண பரம ஹம்சரின் தலைசிறந்த முக்கிய சீடர் ஆனார்.ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் 1885&ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டார். அவர் சமாதி அடைவதற்கு 3 நாட்களுக்கு முன் தனது சீடர் நரேந்திரனுக்குத் தனது சக்தி அனைத்தையும் வழங்கினார்.ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகஸ்டு மாதம் 16&ம்நாள் அதிகாலை 1 மணிக்கு மகாசமாதி அடைந்தார்.ஸ்ரீராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் நரேந்திரன் தனது சகோதர சீடர்களை ஒன்று கூட்டி வராக நகரின் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் தவ வாழ்க்கை வாழ்ந்தனர். இதன் பின்னர் அனைவரும் துறவறம் பூண்டுயாசகம் எடுத்து வாழத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்ல தொடங்கினார்கள்.ஒரு முறை நரேந்திரன் ஆல்வின் ராஞூயத்துக்குச் சென்றார். அங்கு ஆண்ட ராஜா அவரை விருந்தினராக உபசரித்துத் தனது அரண் மனையில் தங்கச் செய்தார். ஒருநாள் ராஜா நரேந்திரனிடம் சுவாமிஜி! எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. இதனால் என் நிலை என்னவாகும் என்றார்? இதைக் கேட்ட நரேந்திரன் அங்கு சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த ராஜாவின் தந்தை படத்தைக் கழற்றிவரச் செய்து அதன் மீது யாரேனும் ஒருவர் எச்சில் துப்புங்கள் என்றார்.இதைக் கேட்ட அனைவரும் அங்கு இருந்து விலகிச் சென்றனர்.

உடனே நரேந்திரன் ""ஏன் இதில் வெறும் காகிதமும், வர்ணக் கலவையும் தானே உள்ளது. பின் ஏன் எச்சில் துப்புவதற்கு மறுக்கிறீர்கள்? காரணம் இது உங்கள் மகாராஜாவின் உருவம், அதனால் மரியாதை கொடுக்கிறீர்கள். அது போலவே மக்கள் கடவுளை உருவத்தில் பார்க்கின்றார்கள். யாரும் கல்லே, மண்ணே செம்பே என்று கடவுள் வடிவத்தின் முன் நின்று வேண்டுவதில்லை என்று கூறினார்.இதைக் கேட்ட ராஜா நான் திருந்தினேன் எனக்கூறி நரேந்திரனிடம் மன்னிப்புக் கேட்டார்.

இதனைத் தொடர்ந்து நரேந்திரன் பிருந்தாவனம், அயோத்யா, ஆக்ரா, இமயம், மீரட், ராமேசுவரம் ஆகிய இடங்களுக்குச் சென்று விட்டுக் கடைசியாக பாரதத்தின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியை 1892&ம் ஆண்டு வந்து அடைந்தார்.அங்கு தேவியை வணங்கி வெளியே வந்த அவரது கண்ணுக்கு நடுக்கடலில் அமைந்து இருக்கும் பாறை ஒன்று தென்பட்டது. உடனே அந்தப் பாறைக்கு நீந்திச் சென்றார். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து தியானத்தில் அமர்ந்தார்.

அப்போதுதான் அவருக்கு பண்டைய பாரதப் பண்பாடு, இன்றைய வறுமை, தாழ்வு, மீண்டும் உலகின் முதல் நாடாக பாரதம் திகழப் போவதையும் உணர்ந்தார். அதில், தனது பணி என்ன என்பதை உணர்ந்தார்.இந்த நிலையில் கேத்ரி ராஜா தங்கள் அருளால் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் முதல் பிறந்த நாள் விழாவில் கண்டிப்பாக நீங்கள் கலந்து கொண்டு ஆசி வழங்க வேண்டும் என்று நரேந்திரனுக்குக் கடிதம் அனுப்பி இருந்தார்.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு நரேந்திரன் தனது பெயரை சச்சிதானந்தா என்றும் விவிதிஷானந்தா என்றும் மாற்றிக் கொண்டு சென்றார்.

விழா முடிந்த பின்னர் கேத்ரி ராஜா அஜித்சிங் சச்சிதானந்தாவிடம் இனி தங்கள் பெயரை அடிக்கடி மாற்றி கொள்ள வேண்டாம் "விவேகானந்தர்' என்ற பெயரையே நிலையாகச் சூட்டிக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பெயரைச் சூட்டினார்.

விவேகானந்தர் 1893 ம் ஆண்டு மே 31&ந் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரான சிக்காகோவுக்குப் புறப்பட்டார். ஜ?ை மாதம் 31&ந் தேதி விவேகானந்தர் சிக்காகோவைச் சென்று அடைந்தார். விவேகானந்தர் அங்கு சென்ற உடன் சர்வ சமய மாநாட்டினைப் பற்றி விசாரித்தார். அதுசெப்டம்பர் முதல் வாரத்துக்குத் தள்ளிப் போடப்பட்டுள்ளது என்பதையும் அதில் கலந்து கொள்வதற்கு ஏதாவது ஒரு மதத்தின் நற்சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.அவ்வளவு நாட்கள் அங்கு தங்குவதற்குக் கையில் பணமும் இல்லை. அவர்கள் கேட்கும் நற்சான்றிதழும் இல்லை. ஒரு சில நாட்களில் அவர் கையில் இருந்த பணம் கரைந்து போனது. இதனால் சாப்பிடுவதற்கு உணவுகூட இல்லாமல் சில நாட்களை நகர்த்தி வந்தார்.

இதன் பின்னர் சிக்கா கோவில் இருந்து பாஸ்டனுக்குப் புறப்பட்டார். அங்கு அவருக்கு ரைட் என்ற பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் விவேகானந் தரைத் தனது வீட்டிலேயே தங்க வைத்து உபசரித்தார். பின்னர் ஹார்வாட் பல்கலைக் கழகத்தின் கிரேக்க மொழிப் பேராசிரியர் ஜே.டபிள்யூ.ரைட் என்பவரிடம் விவேகானந்தரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் விவேகானந் தருக்குப் புனித நற்சான்றிதழ் கிடைக்கச் செய்தார்.

இதனைத் தொடர்ந்து சிக்காகோ நகருக்கு விவேகானந்தர் புறப்பட்டு வந்தார்.சுவாமி விவேகானந்தர் எதிர்பார்த்துக் காத்து இருந்த அந்த செப்டம்பர் 11&ந் தேதியும் வந்தது. சர்வ சமய மாநாடும் தொடங்கியது. உலகில் உள்ள எல்லா மதத்தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது மதத்தினைப் பற்றிப் பேசிச் சென்றனர். அன்றைய நாளின் கடைசி ஆளாக சுவாமி விவேகானந்தர் பேசுவதற்கு அழைக்கப் பட்டார்.

சுவாமி விவேகானந்தர் தனதுபேச்சினை ""அமெரிக்கசகோதர! சகோதரி களே'' என்று பேச ஆரம்பித்ததும் அங்கு கூடி இருந்த 6 ஆயிரம் மக்களின் இதயங்களை ஒரு நொடிப் பொழுதில் கொள்ளை கொண்டார். அவர் தொடர்ந்து தனது பேச்சில் எல்லா மதங்களுக்கும் தாய் மதம் இந்து மதம். சகிப்புத் தன்மையை உலகிற்குக் கூறிய மதம் இந்து மதம். நதிகள் அனைத்தும் கடலில் சென்று கலக்கின்றன. அதுபோல சமயங்கள் பலவாகத் தோன்றினாலும், அனைத்தும் கடவுளைத்தான் சென்று அடை கின்றன என்று பேசினார்.அந்த மாநாட்டைப் பற்றி அடுத்த நாள் செய்திகள் வெளியிட்ட பத்திரிகைகளின் முதல் பக்கத்தை சுவாமி விவேகானந்தர் அலங்கரித்துக் கொண்டு இருந்தார்.

அவரது பெருமையைக் கேட்ட மக்கள் மாநாட்டுக்கு சுவாமி விவேகானந்தரின் பேச்சைக் கேட்பதற்கு என்று வரத் தொடங்கினார்கள்.இதனால் மாநாட்டில் மற்ற மத போதகர்கள் பேச்சு அலுப்புத் தட்டும்போது சுவாமி விவேகானந்தரைப் பேச அழைத்தனர். இதனால் அவரது புகழ் நாடுதாண்டிப் பரவத் தொடங்கியது.

சுவாமி விவேகானந்தர் 3 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது சொற்பொழிவை முடித்துக் கொண்டு 1896&ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.3 ஆண்டு காலமாக ஓய்வு இன்றி உழைத்ததின் காரணமாக அவரது உடல் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தது. 1897ம் ஆண்டு ஜனவரி 28ந் தேதி ராமேசுவரம் வந்த அவரை நாடு முழுவதும் ஒரு விழாவாக எடுத்துக் கொண்டாடி வரவேற்றது.

நன்றி -

http://tamil.sify.com/kalaimagal/sept04/fullstory.php?id=13565369

'அறிவுக் கனல்' சுவாமி விவேகானந்தர்



'நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல், நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகும்.'

'உங்களுடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுங்கள், நமக்குத் தேவை, இரும்பைப் போன்ற தசைகளும் எஃகைப் போன்ற நரம்புகளும்தான்.' சுய வலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்!

துவண்டு கிடந்த இளைஞர் சமுதாயத்திற்கு இப்படி புது ரத்தம் பாய்ச்சிய அந்தச் சிம்மக் குரல், சுவாமி விவேகானந்தரிடம் இருந்து ஒலித்தது.

நரேந்திரன்,1863-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள் பிறந்தார். சிறு வயது முதல் நரேந்திரன், சன்னியாசிகள்-ஏழைகள் மீதுகாட்டிய அன்புக்கு அளவில்லை. தன் வீட்டிற்கு வந்து யாசிப்பவர்களுக்கு, கிடைத்ததையெல்லாம் கொடுத்துவிடுவார்.

கடவுளைக்காண வேண்டும் என்ற வேட்கை சிறுவயதிலேயே நரேந்திரனுக்கு ஏற்ப்பட்டது. கடவுளைக் காணாவிடில் கற்பதாலும், கற்றவர்களோடு உறவாடுவதாலும் என்ன பயன் என்று அவர் உள்ளத்தில் சிந்தனைகள் எழுந்தன. பெரியோர் பலரை அணுகி, கடவுளைக் கண்டிருக்கிறீர்களா என ஆர்வத்தோடு வினவினார். ஆனால், இவருக்குத் திருப்தியான பதிலை யாரும் அளிக்கவில்லை.

அவ்வப்போது இவருக்குத் தெரிந்த ஒரு நண்பர்மூலம் தட்சினேணஸ்வர ஆலயத்தில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற மகான் வாழ்வது தெரியவந்தது. அவரைச் சந்திக்கச் சென்றார். நரேந்திரனைப் பார்த்ததும், பரமஹம்சர் பரவசமடைந்தார். பழைய நண்பன் ஒருவனைக் கண்டவர் போல உரையாடினார். 'எத்தனை நாள் நான் ஆவலுடன் உனக்காகக் காத்திருப்பது' என்று ஏக்கத்துடன் கூறினார். ராமகிருஷ்ணர். நரேந்திரர், ராமகிருஷ்ணரைப் பார்த்து, 'நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?' என வினவினர். அதற்கு ராமகிருஷ்ணர், 'நான் உன்னைக் காண்பதைப்போல கடவுளைக் கணடிருக்கிறேன். வேண்டுமானால் அவரை உனக்குக் காட்டுகிறேன்' என்றார். அதுமுதல் அவர், ராமகிருஷ்ணரின் பக்தரானார். நரேந்திரன், சுவாமி விவேகானந்தரானார்.

ராமகிருஷ்ணரின் மறைவிற்குப் பிறகு, ஆசிரமத்திற்கு உதவி வந்த பலர் பாராமுகமாக இருந்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல, ஊர் மக்களும் விவேகானந்தரையும், மற்ற சீடர்களையும் பழித்தார்கள். பல நாட்கள் அவர்கள் உணவில்லாமல் பட்டினியோடு இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு ஆறுதல் சொல்லி வழிநடத்தினார். விவேகானந்தர்.

பாரத நாட்டு மக்களை நேரிடையாகத் தரிசிக்க சுவாமி விவேகானந்தர் விரும்பினார். 1881-ஆம் ஆண்டு கையில் கமண்டலமும், தண்டமும் தாங்கி அவர் புறப்பட்டார். பணம் எதையும் வைத்துக்கொள்வதில்லை என்றும், வலிய வருகிற உணவை மட்டும் புசிப்பதென்றும், நாள?65;்கென்று எதையும் தேடி வைப்பதில்லை என்றும் அவர் விரதம் பூண்டார். இப்படியாக அவர் பல ஊர்களைக் கடந்து கன்னியாகுமரி வந்தடைந்தார். முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் கடல நடுவே இருக்கும் பாறையில மூன்று நாட்கள் அன்னை பராசக்தியை நோக்கித் தவமிருந்தார். ?91;்யவேண்டிய காரியங்கள் பற்றி அவர் மனத்தில் உதயமாயிற்று.

சுவாமி விவேகானந்தரிடம் இயற்கையாகவே நல்ல நினைவாற்றல் இருந்தது. இதனால் எந்தப் புத்தகத்தையும் விரைவாகப் படித்து முடித்துவிடுவார். அவரது அபார நினைவாற்றலை விவரிக்கும் ஒரு சம்பவம். விவேகானந்தரின் அறையில் 'என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா' என்ற நூலின் 25 பாகங்கள் அழகாக அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சரத் சந்திரா என்ற சீடர், சுவாமிஜியின் அறைக்கு வந்தார். அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்து சுவாமிஜி 'இந்தப் புத்தகங்களையெல்லாம் படித்து முடிக்க ஒரு ஜென்மம் போதாது போல இருக்கிறதே' என்றார் வியப்புடன்.

'சரத் இதைப் படிக்க அவ்வளவு காலம் எதற்கு? நான் இங்கு வந்த சிலமாதங்களுக்குள் பத்ததுப் பகுதிகளைப் படித்து முடித்துவிட்டேன்' என்றார். சுவாமிஜி. சரத் சந்திரர் நம்பவில்லை. தான் படித்துள்ள பத்துப் பகுதிகளில் எதைப்பற்றிக் கேட்டாலும் பதில் சொல்லத் தயார் என்று சுவாமிஜி கூறியதும் சரத் உற்சாகமடைந்தார். பத்துப் பகுதிகளையும் எடுத்து, அவற்றில் தமக்குத் தோன்றிய கேள்விகளையெல்லாம் கேட்டார். சுவாமிஜி ஒவ்வொன்றுக்கும் உரிய பதிலைத் தெளிவாக எடுத்துரைத்ததும் சரத் சந்திரரின் வியப்பூ, எல்லை கடந்தது.

அன்னை சாரதையின் ஆசி பெற்று 1893 செப்படம்பர் 11-ஆம் தேதி சிகாகோவில் சர்வமத மகாசபையில இந்திய பிரதிநிதியாக சுவாமிஜி கலந்துகொண்டார். அதற்கு ஏற்பாடுகள் பொருளுதவியும் செய்தவர்கள், சென்னையைச் சேர்ந்த பக்தர்கள்.

' கொலம்பியன் ஹால்' என்ற மண்டபத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர்கூடினர். அவைத் தலைவர் ஒவ்வொருவராகப் பேச அழைத்தார். சுவாமிஜி முறை வந்தது. அப்போது அவர் அம்பாள் சரஸ்வதியையும், தமது குருநாதரையும் நினைத்துப் பேசத் தொடங்கினார்.

'அமெரிக்க நாட்டுச் சகோதரி, சகோதர்களே' என்று தொடங்கினார். அவ்வளவுதான் அவரை மேலும் பேசவிடாது தடுத்தது. கரவொலி, காரணம், அதுவரை மற்றவர்கள் 'சீமாட்டிகளே, சீமான்களே' என்று விளித்துப் பேசியதுதான். உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற தத்துவத்தை மிக எளிமையகாத் தனது முதல் உரையிலேயே எடுத்துக் கூறிவிட்டார். சுவாமி விவேகானந்தர்.

விவேகானந்தரின் வித்தியாசமான உரையால் ஈர்க்கப்பட்ட சகோதரி நிவேதிதை பிற்காலத்தில் இவரது பிரதான சீடரானார். பாரதம் வந்து இதையே தனது தாய்நாடாகக் கருதினார். பாரத மக்களுக்குப் பல சேவைகள் புரிந்தார். விவேகானந்தரின் அறிவுரைப்படி பெண் முன்னேற்றத்திற்கு முதன் முதலில் வித்திட்டவரும் இவரே. இவரைச் சந்தித்த பிறகே கவிராஜன் பாரதி பெண் முன்னேற்றத்திற்காகப் போர்க்குரல் எழுப்பினான்.

'உங்கள் தேசத்திற்கும் எங்கள் தேசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?' என்று ஒரு வெளிநாட்டினர், விவேகானந்தரிடம் கேட்டபோது, 'உங்கள் நாட்டில் தாயைத் தவிர மற்ற பெண்களைத் தாரமாக எண்ணுவார்கள். மாறாக எங்கள் நாட்டில் தாரத்தைத் தவிர மற்ற பெண்களைத் தாயாகப் போற்றுகிறோம்' என்றார். விவேகானந்தரின் இத்தகைய பேச்சாலும், அறிவுரையாலும் மேலை நாட்டினர் மத்தியில் பாரதத்தின் பெயர், புகழ்பட மிளிர்ந்தது.

' இளைஞர்களே! மேலை நாட்டினரைப் பார்த்து வெறுமனே எதிரொலிப்பது, கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது, சார்ந்திருப்பது இவை அனைத்தும் கோழைத்தனம். நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொள்! பாரத நாட்டில் பிறந்த அனைவரும் என் சகோதர்கள் என்று பெருமிதத்துடன் பறைசாற்று' - இவ்வாறு எதிர்கால இந்தியாவின் நன்மைக்காக இளைஞர்கள் செய்யவேண்டிய உன்னதகக் கடமை பற்றி சுவாமிஜி உபதேசித்தார்.

கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜூனனுக்கு வீரத்தையும் வலிமையையும் கூறியதுபோல் 'எழுமின், விழிமின், கருதிய காரியம் கைகூடும் வரை உழைமின்' என்று உபதேசித்த சுவாமி விவேகானந்தர், 1902-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் நாள் மீண்டும் பிரபஞ்சத்தில் கலந்தார். அவர் கேட்ட அந்த நூறு இளைஞர்கள் எங்கே இருக்கிறார்களோ?

நன்றி -

http://tamil.sify.com/amudhasurabi/jan04/fullstory.php?id=13353757